இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டம், திருத்துரைப்பூண்டி தாலுக்காவைச் சேர்ந்த இடும்பவனம் என்ற கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் பிறந்தவர்.
வரலாற்றியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். நினைவு தெரிந்த நாள் முதலே நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீவிர ரசிகராக இருந்தவர். தொழில் ரிதியாக சென்னை மாநகருக்கு வந்து தங்கியதன் பின்னால், சிறுவயது முதல் எந்த நடிகரின் தீவிர ரசிகராக இருந்தாரோ அவரிடமே பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தனி இயக்கம் கண்டபோதும், பின்னர் ஜனதாதளத் தமிழக தலைவராக இருந்தபோதும், கட்சி தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தொலைவில் இருந்து ரசித்தவரிடம் நெருங்கிப் பழகிப் பணியாற்றிடும் வாய்ப்பைப் பெற்றவுடன், நடிகர் திலக்த்தின் மேல் கொண்ட அபிமானம் மேலும் பெருகியது.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மறைவிற்குப்பிறகு, அவருடைய புகழ்பரப்பவும், அவருடைய பெயரால் சமூகசேவைகள் புரியவும், " நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை " என்ற அமைப்பைத் தொடங்கி பணியாற்றி வருகிறார்.
|